தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 Swine Flu எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் H1N1 Swine Flu (பன்றிக்காய்ச்சல்) பாதிப்பு எண்ணிக்கை 19-ல் இருந்து 339 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் பிரிவுகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
H1N1 வைரஸ் அறிகுறிகள் என்ன?
H1N1 Swine Flu பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக:
* காய்ச்சல்
* இருமல்
* தொண்டை வலி
* மூக்கு ஒழுகுதல்
* கடுமையான தலைவலி
* உடல் சோர்வு
* பசியின்மை
ஆகியவை காணப்படலாம். சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சாதாரண சளி, காய்ச்சல் என அலட்சியம் வேண்டாம்!
லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் ஏற்பட்டால் அதை சாதாரண உடல்நலக் குறைவு என நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மருத்துவர்களை அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.
சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்:
காய்ச்சல் அல்லது சளி ஏற்பட்டவுடன் மருந்தகங்களுக்கு சென்று தாங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்து, அறிகுறிகள் தென்பட்டால் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்.
எப்போது மருத்துவமனை செல்ல வேண்டும்?
H1N1 Swine Flu அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையத்தை உடனடியாக அணுகி, மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தனிநபர் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதுடன், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.