தை பூசம்: பக்தர்கள் அரோகரா… முழக்கம்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சூரபத்மனை வதம் செய்வதற்கு முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்தபெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரமாகி, தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்கிறார்.

தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களிலிருந்து விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு காவடி எடுத்தும் அலகு குத்தியும் முருகர் பக்தி பாடல்களை ஆடி, பாடி வழிபட்டனர். இதனால், திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *