திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட் குறித்து பேசிய போது குறுக்கிட்ட அறநிலையத் துறை ரமேஷை, சாமி அமைச்சர் என எம்ஆர்கே அழைத்த போது முதல்வர் விஜய் விழுந்து விழுந்து சிரித்தார். இதனால் அவையிலும் சிரிப்பலை எழுந்தது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு, இன்று மீண்டும் சட்டசபை கூடியது.
அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எங்களை எல்லாம் பார்த்து பார்த்து செதுக்கியவர் கருணாநிதி. 1996 ஆம் ஆண்டு என்னை இந்த சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் எனக்கு ஒரே வருத்தம், பேப்பர் படித்ததில்லையா என முதல்வர் விஜய் கேட்டது! நாங்கள் எல்லாம் பேசி பேசி , கொள்கைகளை பேசி பேசி ஆட்சியை பிடித்தவர்கள். மக்கள் மனதை தொட்டவர்கள்.
மக்கள் மனதில் இருந்து நாங்கள் வந்தவர்கள். நாங்கள் அமைச்சராக இருந்த போது காலை 6 மணிக்கெல்லாம் முதல்வர்களாக இருந்த கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் பேப்பர்களை பார்த்துவிட்டு எங்களுக்கு போன் செய்வார்கள். 8 மணி தாண்டினால்தான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். அதுவரை எந்த பேப்பரில் என்ன வந்திருக்கிறதோ என பதற்றத்துடனேயே இருப்போம். எனவே எங்கள் இயக்கத்தினர் டிவி, பேப்பர்களை படிப்போம். அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினோம்.
பேப்பரை படித்துவிட்டு துறை அமைச்சரையும் ஆட்சியரையும் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து, அங்க இந்த பிரச்சினை, இங்கு அந்த பிரச்சனை என சொல்வார். ஆகையால் இந்த 5 ஆண்டுகளும் எங்களுக்கு டென்ஷனிலேயே போய்விட்டது. ஆனால் தவெக அமைச்சர்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள். அதுதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என சொன்ன போது அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறுக்கிட்டு, “வாய்க்கா பிரச்சினைக்கு கூட போன் செய்து அதை சரி செய்தாகிவிட்டதா என முதல்வர் கேட்டார். உங்களுக்காவது 5 வருஷம் டென்ஷன். ஆனால் நாங்கள் தினந்தோறும் டென்ஷனாக இருக்கிறோம். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு பயம் இருக்கிறது” என்றார்.
அப்போது அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “எம்ஆர்கே பன்னீர் செல்வம் ஒரு விவசாயியை மறந்துவிட்டார். அதாவது கரும்பு காட்டுக்குள் டைல்ஸ் போட்டு நடந்து சென்ற விவசாயி” என மறைமுகமாக ஸ்டாலினை விமர்சித்திருந்தார்.
அப்போது எம்ஆர்கே பன்னீர் செல்வம் குறுக்கிட்டு, சாமி அமைச்சரே! அறநிலைய அமைச்சரே, சாமி அமைச்சர் நீங்கள் எல்லாம் எப்படி டெக்னிக்காக பேசி பிரச்சாரம் செய்தீர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது என தெரிவித்தார். அப்போது விஜய் விழுந்து விழுந்து சிரித்தார்.