தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான எம்.எட். (M.Ed.) பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு அறிய வாய்ப்பாக விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாமல் போன மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் வகையில் இந்த கால அவகாசம் வரும் செப்டம்பர் 10, 2026 (10/09/2026) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 31ஆம் தேதி (31/08/2026) முதல் தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை விபரங்கள் மற்றும் தகுதிப் பட்டியல்கள் அவர்களின் கைபேசி எண் (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
ஏற்கனவே ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதற்கட்ட சேர்க்கை, தரவரிசைப் பட்டியலின் (Rank List) அடிப்படையில் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி (27/08/2026) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்களுக்கான வழக்கமான எம்.எட். வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி (01/09/2026) முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, தங்களின் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுமாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவிற்கான கட்டணங்களை மாணவர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPI (GPay/PhonePe) மூலம் மட்டுமே செலுத்த முடியும். ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய இளங்கலை கல்வியியல் படிப்பு (B.Ed.) மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தயாராக வைத்திருக்க வேண்டும்.