சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம் சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் மாதம் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், அணையில் போதுமான நீர் இல்லாததால் குறிப்பிட்ட தேதியில் நீர் திறக்கப்படவில்லை. மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்து வந்தது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது.
இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்குச் சென்ற முதலமைச்சருக்கு, சாலையின் இருபுறமும் மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்குச் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, முதலமைச்சர் விஜய், டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து மலர்தூவி தண்ணீரைத் திறந்து வைத்தார். இன்று முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அணைக்கு நீர் வரத்தை பொருத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.